×

இன்று அட்சய திருதியை கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கடைகள் திறக்க ஏற்பாடு: அதிரடி சலுகை அறிவிப்பு; 30% விற்பனை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இதன்படி இந்தாண்டு அட்சய திருதியை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.18 மணிக்கு தொடங்கி, நாளை (புதன்) காலை 7.32 மணி வரை இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் 7ம் தேதி நள்ளிரவு வரை திறக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடிய, விடிய அட்சதிருதியை நடப்பதால் மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்ைட, போரூர், பாடி உள்ளிட்ட பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்படுகின்றனர். கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்களின் நடவடிக்கைகள்  கண்காணிக்கப்பட உள்ளன. மேலும், நகைக்கடைகள் அதிகம் உள்ள பகுதியில்  போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளது.கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சதிருதியை என்பது கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டு வழக்கமான நிலைக்கு மக்கள் வந்துள்ளனர். இதையொட்டி கடந்த காலங்களை போல விற்பனை அதிகரிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கருதுகின்றனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு செய்பவர்களுக்கு பல கடைகளில் தங்க நகைகள், நாணயங்களுக்கு செய்கூலி கிடையாது. கிராமுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வரை தள்ளுபடி. முன்பதிவு செய்யும் போது என்ன விலை விற்றதோ, அந்த விலைக்கு தங்கம் விற்பனை, தங்க நகை வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே வந்து அழைத்து செல்ல வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அட்சய திருதியை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி முதல் நகைக்கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியைக்காக புதுபுது டிசைன்களில் ஏராளமான நகைகள் விற்பனைக்காக வந்துள்ளது. கடைகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டாக அட்சதிருதியை கொண்டாடப்படவில்லை. 2 ஆண்டு பிறகு அட்சதிருதியை கொண்டாடப்படுவதால், இந்தாண்டு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை நகைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கடைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

* தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.496 குறைந்தது
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் மீண்டும் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது நேற்று காலையில் கிராமுக்கு ரூ.48 குறைந்து ஒரு கிராம் ரூ.4,855க்கும், சவரனுக்கு ரூ.384 குறைந்து ஒரு சவரன் ரூ.38,840க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது, கடந்த சனிக்கிழமையை விட கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,841க்கும், சவரனுக்கு ரூ.496 குறைந்து ஒரு சவரன் ரூ.38,728க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் நகை விலை குறைந்துள்ளது நகை வாங்க நினைப்போருக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Atsya Tritiya Celebration ,Tamil Nadu , Today's Atsya Tritiya Celebration is scheduled to open in shops across Tamil Nadu from early morning till midnight: Action Offer Announcement; Chance to increase sales by 30%
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...